மாவட்ட செய்திகள்

ரெயில்வே ஊழியரின் குழந்தையை கடத்த முயற்சி 2 பெண்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் ரெயில்வே ஊழியரின் 1½ வயது குழந்தையை கடத்த முயன்ற 2 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 30). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி கனகவள்ளி (28). அரசு குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலராக உள்ளார். இவர்களுக்கு 1 வயதில் சஜித் என்ற ஆண்குழந்தை உள்ளது.

கிருஷ்ணராயபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக மாமனார் மகாமுனி வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சந்திரசேகர் சென்றிருந்தார்.

நேற்று காலை சந்திரசேகரும், கனகவள்ளியும் வேலைக்கு சென்று விட குழந்தை சஜித் தனது தாத்தா வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது.

அப்போது அப்பகுதியில் 2 பெண்கள் கோவிலுக்கு காணிக்கை கேட்டு வந்தனர். அந்த பெண்கள் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சஜித்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த அப்பகுதியினர் அந்த பெண்களை சுற்றி வளைத்து பிடித்து மாயனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முசிறியை அடுத்த சந்தப்பாளையத்தை சேர்ந்த அழகம்மாள் (வயது 60), மாரியாயி (35) என்பது தெரிய வந்தது.அவர்கள் கோவிலுக்கு காணிக்கை கேட்டுதான் வந்தார்களா? அல்லது குழந்தையை கடத்த வந்தார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT