குளித்தலை,
கரூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வெப்பம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங் களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் குளித்தலையில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் ரெத்தினவேலு, மண்டல துணை வட்டாட்சியர் வைரபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குளித்தலை மாரியம்மன் ஊராட்சி பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் குளித்தலை வருவாய் ஆய்வாளர் துரைசாமி, ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் பூபதிராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தரகம்பட்டி அருகே கடவூர் வட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு கடவூர் தாசில்தார் மைதிலி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தரகம்பட்டி பஸ் நிலையம் வரை சென்றது. இதில் வருவாய் ஆய்வாளர் பாலசந்தர், கிராம நிர்வாக அலுவலர் குமாரபாண்டியன், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.