மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில், நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடரமணன், இணை செயலாளர்கள் கோதண்டராமன், விஜயகுமார், ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ஏழுமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் என்.சுரேஷ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT