கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் நரசிங்கராவ் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் உள்ள ஒரு வங்கியில் வங்கி மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் வங்கி பாதுகாப்பு அறையில் உள்ள நகைகளை பரிசோதித்தார். அப்போது அதில் போலி நகைகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணராவ் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதாரிடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த புகாரில் கிருஷ்ணகிரியில் உள்ள தர்மராஜாகோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ். அவரது மனைவி தேவிகா (வயது38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். அப்போது, அவர் வாடிக்கையாளர்கள் பலரிடம் போலி நகைகளை வாங்கி கொண்டு அதற்கு கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கு அனுப்பி வைத்தார். அதன்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தேவிகா, அந்த வங்கியின் வாடிக்கையாளர்களிடம் போலி தங்க நகைகளை வாங்கி கொண்டு முறைகேடாக 32 லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் கடன் வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது பாஷா, போலி நகைகளுக்கு கடன் வழங்கிய வழக்கில் நகை மதிப்பீட்டாளர் தேவிகாவை கைது செய்தார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.