தானே,
தானே கோட்பந்தர் ரோடு மான்பாடாவை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த சவான் சிங்(வயது25) என்பவரிடம் சிகரெட் வாங்கி தரும்படி கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சவான்சிங், தன்னிடம் சிகரெட் வாங்கி தறுமாறு கூறிய கிருஷ்ணா மீது ஆத்திரமடைந்தார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணாவின் வயிறு மற்றும் தொடையில் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.
இதில் படுகாயமடைந்த கிருஷ்ணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.
இது குறித்து காப்பூர்பாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவான் சிங்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சவான் சிங்கிற்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.