பெரம்பூர்,
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் கணேஷ். கால் டாக்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 26) கால் டாக்சி ஓட்டி வந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாதவரம் ரவுண்டனா அருகில் தனது காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் டீ கடைக்கு சென்றிருந்தார்.
திரும்பி வந்து பார்த்தபோது தனது கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு போலீசில் கணேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே கார் டிரைவர் விஜயகுமார் கார் மாயமாகி போன சில நாட்களிலேயே வேலைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். இதுபற்றி கால் டாக்சி நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் விஜயகுமாரின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு பம்மதுகுளம் பகுதியில் அவரது வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் விஜயகுமாரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது விஜயகுமார் தனது நண்பர்கள் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த சந்திரசேகர் (35) மற்றும் வேறு ஒருவருடன் சேர்ந்து காரை திருடி விற்றது தெரியவந்தது.
கார் திருடுபோய் விட்டதாக நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ் மற்றும் போலீசாரிடம் நாடகமாடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விஜயகுமார் மற்றும் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள கூட்டாளி ஒருவரிடம் தான் கார் இருப்பதாக தெரியவருகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.