கடலூர்,
பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு விலையில்லா சைக்கிளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்படி பிளஸ்-1 படித்து வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை.
இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ்-1 படித்து வரும் மாணவர்களுக்கும், கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்து விட்டு தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் 18 ஆயிரத்து 216 மாணவிகள், 23 ஆயிரத்து 967 மாணவர்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 183 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தவுடன் விரைவில் இந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தெரிவித்தார். இதற்காக சைக்கிள் உதிரிபாகங்கள் வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, அந்த உதிரிபாகங்கள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டு பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.