பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சனூத்து என்ற மலைக்கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர், மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
கிராம மக்களில் 4 பேருக்கு மட்டும் ரேஷன் கார்டு உள்ளது. அதேவேளையில் சாதிச்சான்று உள்ளிட்ட பிற ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், ஆர்.டி.ஓ. ஆனந்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மஞ்சனூத்து கிராமத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ரேஷன் கார்டு உள்ள 4 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம், மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கினர். மீதமுள்ள 12 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கினர்.
மலைக்கிராம மக்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு, சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் வடிவேல்முருகன், குளிவேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.