கடலூர்,
முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு இருக்கும் இடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பழைய டயர்கள், டீ கப் மற்றும் குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதவிர அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திடீர் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார்.
அந்த வகையில் கடலூர் தொழிலாளர் நல அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக வளாகத்தில் கிடந்த உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மாடியில் உள்ள தண்ணீர் சேமிக்கும் தொட்டியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதோடு தினமும் குளோரினேஷன் செய்ய வேண்டும் என தொழிலாளர் நல ஆய்வாளருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது தொழிலாளர் நல ஆய்வாளர் வெங்கடேசன், தொழிலாளர் நல அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.