புதுச்சேரி,
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தங்களுக்கு இந்த சம்பள பாக்கியை வழங்கக்கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 8-ந்தேதி முதல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தர்ணா, கஞ்சி காய்ச்சுதல், சட்டசபை முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி மில் அருகே குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்ஸ்கோ ஊழியர் மற்றும் தொழிலாளர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
தர்ணாவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொறுப்பாளர்கள் வாழ்த்திப் பேசினார்கள். தர்ணாவில் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.