நாமக்கல்,
இந்து கோவில்களில் சாமிக்கு தினசரி பூஜை நடைபெற்றாலும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் மூடப்பட்டுள்ள கோவில்களை திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி நேற்று இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் முன்பு நடந்த தோப்புக்கரணம் போடும் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதையொட்டி கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டனர்.
இந்த போராட்டம் சமூக இடைவெளியை பின்பற்றி ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நடத்தப்பட்டதால் 4 பேர் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.