தரகம்பட்டி,
தரகம்பட்டி அருகே உள்ள சிந்தாமணிப்பட்டியில் உள்ள பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு அனைத்து மதத்தை சார்ந்த 15 எளியவர்களுக்கு ஜமாத் சார்பில் அரிசி மற்றும் புத்தாடைகளை வழங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ சேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
11 மாதங்கள் சராசரியாக உணவு சாப்பிட்டு பின்னர் ரமலான் மாதம் முழுவதும் கடுமையான நோன்பிருந்து அதன் மூலம் ஏழை, எளிய மக்களின் பசியை உணரக்கூடிய வகையில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி பிறருக்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்துவது இந்த நோன்பு காலம் ஆகும்.
சகோதரத்துவம் என்கிற இந்த எண்ணம் அனைவருக்கும் எந்த காலத்திற்கும் வேண்டும். எந்தவொரு மத மார்க்கமும் செல்லுகிற வழிகள் மாறுபட்டாலும் நோக்கம் இறைவனை சென்றடைவதே. இந்த ஈகை குணம் அடுத்த சந்ததியினருக்கும் சென்றடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கலால் சைபுதீன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம், தஞ்சாவூர் நுகர்வோர் மன்ற நீதிபதி முகமது அலி, வட்டாட்சியர் புகழேந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஜமாத் தலைவர் சிராஜூதீன் அகமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.