பழனி,
பழனி மலைக்கோவிலில் நேற்று காலை பழனி தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கோவில் சமையல் கூடங்களில் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றினால் எவ்வாறு அணைப்பது என விளக்கமளித்தனர்.
அதையடுத்து பக்தர்கள் கூட்டத்துக்குள் பாம்பு புகுந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அதனை எவ்வாறு லாவகமாக பிடிக்க வேண்டும் என்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர், தீ விபத்தின் போது மலைக்கோவில் மண்டபங்களில் சிக்கியவர்களை கயிறு கட்டி எவ்வாறு மீட்கலாம் என்றும் தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.