தஞ்சாவூர்,
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கலைஞர் நகரில் வசித்து வருபவர் மணியரசன். இவர் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர். கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி சென்னை செல்வதற்காக தஞ்சை ரெயில் நிலையத்திற்கு தனது வீட்டில் இருந்து நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மணியரசன் புறப்பட்டார். தஞ்சை மணிமண்டபம் அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள் திடீரென மணியரசனை தாக்கினர். மேலும் அவரின் கைப்பையையும் பறித்து சென்றனர். இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கரந்தை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சந்தேகப்படும்படி சிலரின் உருவப்படம் பதிவாகி இருந்தது. அந்த படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த முருகவேல்(வயது33), அரியலூர் மாவட்டம் கீழப்பழூரை சேர்ந்த வினோத்குமார்(28), தஞ்சை குருவாடியை சேர்ந்த புஷ்பராஜ்(26), திருவையாறு நடுக்கடையை சேர்ந்த முகமது தவுபீக்(22) ஆகிய 4 பேரும் பணத்திற்கு ஆசைப்பட்டு மணியரசனை தாக்கியது தெரியவந்தது.
அதன்பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து தஞ்சை 2-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.