கூடலூர்,
தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் சந்திப்பில் கூடலூர் நகரம் உள்ளது. கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூர் வழியாக தினமும் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நகரமாக கூடலூர் காணப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் இரும்பு பாலம் பகுதி உள்ளது. இங்குள்ள சாலையில் பலத்த மழையால் விரிசல் ஏற்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சுமார் 75 மீட்டர் தூரத்துக்கு இன்டர்லாக் கற்கள் பதித்தனர்.
இதனால் மழைக்காலத்தில் வாகன விபத்துகள் அதிகரிக்கும் என்றுக்கூறி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இன்டர்லாக் கற்கள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் பலத்த மழை பெய்தது.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதேபோன்று அடுத்த 30 நிமிடங்களில் கேரளாவில் இருந்து அந்த வழியாக கர்நாடகா நோக்கி சென்ற மற்றொரு சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாண்டியாற்றின் கரையோரம் உள்ள சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த அடுத்தடுத்த விபத்துகளில் அதிஷ்டவசமாக டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில் தேவாலா போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க இன்டர்லாக் கற்களை அகற்றிவிட்டு தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.