வேலூர்,
வேலூர், சத்துவாச்சாரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 46), தொழிலாளி. இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சேட்டுவை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், சேட்டு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை வேலூர் ஜெயிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.