சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மதுசுதன் ரெட்டி தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று காலை ஜெய்பூரில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்தின் நடைமேடை 8-ல் ஜெய்பூர்-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12970) வந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயிலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பி-1 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் இருப்பதை கண்டனர். இதையடுத்து அவர்களது உடமையை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகைகள் கொண்டு வந்தவர்கள், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 48), தேனியை சேர்ந்த ராமநாதன் (25) என்பதும், 616 பவுன் நகை மற்றும் 7 லட்சத்து 84 ஆயிரத்து 800 பணமும் உரிய ஆவணமின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.