பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி நியூ மேகசின்புரம் ஆறுமுகம்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜ்(வயது 40) மற்றும் தாஸ் (43). அண்ணன்-தம்பியான இவர்கள் இருவரும் டிரைவர் ஆவர். இவர்கள் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் சிமெண்டு சீட்டால் ஆன வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தரைதளத்தில் உள்ள வீட்டில் அவர்களது தம்பி வசித்து வருகிறார்.
ராஜ்-தாஸ் இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டனர். அப்போது அவர்களின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த சிலிண்டர், பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் சிமெண்டு சீட்டால் ஆன வீடு முற்றிலும் நொறுங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பீரோ, துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின.
மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.