புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகளையும் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து அரசே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தேசம் கிராமங்களின் தேசம். விவசாயிகளின் தேசம். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு. எனவே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு தேசம் சந்திக்கும் அபாயத்தின் அறிகுறி. எனவே விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரானைட் ஊழல்
ஏரி, குளங்கள், கண்மாய்களை பராமரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் ஒரு அரசு ஊழியர் என்பதால் அரசின் செயல்பாடு மற்றும் கொள்கை முடிவுகளை விமர்சிக்க முடியாது. என்னுடைய தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் பாதை என்னும் அமைப்பு சமூக சிந்தனை கொண்டதாகவே இருக்கும். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. கிரானைட் ஊழல் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தூய்மை பணி
பின்னர் புதுக்கோட்டை புதுக்குளத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் பாதை அமைப்பினருக்கு வாழ்த்து கூறினார். மேலும் அவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், மக்கள் பாதை அமைப்பினர் சமூக சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.