பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் சத்தியமங்கலத்தில் உள்ள கொமராபாளையம், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் சத்தியமங்கலத்தில் உள்ள ராஜீவ் நகர், ஆர்.எம்.பி. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 7 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. அந்தப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது.
இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்த பவானீஸ்வரர் கோவிலின் ஒரு பக்க சுவர் முழுமையாக இடிந்து விழுந்துவிட்டது. பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம், அரியப்பம்பாளையம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பவானி ஆற்று வெள்ளம் புகுந்தது. அதுமட்டுமின்றி விவசாய தோட்டங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள கிணறுகள் மூழ்கின.