பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமராஜ் (வயது 53). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது உறவினரான பாப்பாங்கரையை சேர்ந்த சந்திரசேகருடன் (41) ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள எசனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரசேகர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த வடிவேல் முருகன் மனைவி ஜெயசுதா(39) நேற்று முன்தினம் பெரம்பலூர் பாத்திமா பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஜெயசுதா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயசுதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.