தேனி,
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இணையதளம் வாயிலாகவும், மாணவ-மாணவிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 138 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 798 மாணவர்கள், 7 ஆயிரத்து 163 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 961 பேர் எழுதினர்.
அவர்களில் 5 ஆயிரத்து 889 மாணவர்கள், 6 ஆயிரத்து 764 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 653 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.63 சதவீதமாக உள்ளது. இதில், மாணவர்கள் 86.63 சதவீதமும், மாணவிகள் 94.43 சதவீதம் ஆகும்.
தேர்ச்சி விகிதம் சரிவு
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தேனி மாவட்டம் தமிழக அளவில் 24-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் 94.54 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். அத்துடன் கடந்த ஆண்டு தமிழக அளவில் 15-வது இடத்தில் தேனி மாவட்டம் இருந்தது. இந்த ஆண்டு 9 இடங்கள் பின்தங்கி உள்ளது.