திருவாரூர்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூரில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சுதந்திர திருநாள் அமுத பெருவிழா
திருவாரூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நகராட்சி திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திர திருநாள் அமுத பெருவிழா விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
7 நாட்கள் கண்காட்சி நடைபெறும்
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாயொட்டி விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த விடுதலை போராட்ட தியாகிகள், தலைவர்களின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு செயல்படுத்தும் பல்வேறு துறை திட்டங்களின் மாதிரி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
எனவே கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் கண்டுகளித்து சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு, அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகரசபை தலைவர் புவனபிரியா, மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந் காந்தி, வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தனபாலன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, தாசில்தார் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.