திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காந்திரோட்டை சேர்ந்தவர் ரீகம் சந்த்ஜெயின் (வயது 53). திருவள்ளூர் நகர் மன்ற உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். திருவள்ளூர் பகுதியில் 4 இடங்களில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவள்ளூர் பஜார் வீதி கொண்டம்மாபுரம் தெருவில் உள்ள இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் ரீகம் சந்த்ஜெயினுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது நகைக்கடையின் பூட்டு வெல்டிங் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 45 பவுன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான 80 வைர கற்கள், ரூ.6 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரீகம் சந்த்ஜெயின் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.