மாவட்ட செய்திகள்

வேளச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு

1 ஏக்கர் 15 சென்ட் நிலத்தை ரெயில்வே துறைக்கு கடந்த 2004-ம் ஆண்டு தமிழக அரசு வழங்கியது.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள 1 ஏக்கர் 15 சென்ட் நிலத்தை ரெயில்வே துறைக்கு கடந்த 2004-ம் ஆண்டு தமிழக அரசு வழங்கியது. அந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடு, கடைகள் என 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்டி இருந்தனர்.

இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ரெயில்வே இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் சென்னை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணியை நேற்று சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், மேலும் இடிக்கப்பட உள்ள கட்டிடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள் அருகே நின்று பொதுமக்கள் ஆர்வம் மிகுதியால் செல்பி எடுத்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT