குன்னூர்,
குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் பக்காசூரன் மலை காட்சிமுனை உள்ளது. இந்த காட்சிமுனை வனத்துறைக்கு சொந்தமான அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு இருந்து பார்த்தால் மேட்டுப்பாளையம், காரமடை, பில்லூர் அணைப்பகுதி, அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பவானி ஆறு ஆகியவை ரம்மியமாக காட்சி அளிக்கும்.
சுற்றுலா பயணிகள் இந்த காட்சிமுனைக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு களித்து வருகிறார்கள். மேலும் மலையேற்ற குழுவினரும் பக்காசூரன் மலை வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சி பெறுகிறார்கள். இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலை பகுதியில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ பிடித்தது. இந்த தீயில் மலை ஏறும் பயிற்சிக்கு சென்ற சிலர் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வடக்கு கோட்ட வன அலுவலர் கலாநிதி அறிவுரையின் பேரில் குன்னூர் சரகர் பெரியசாமி தலைமையில் வனத்துறையினர் பக்காசூரன் வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனரா? என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பக்காசூரன் மலைப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் மலையேற்ற பயிற்சிக்கு மலையேற்ற குழுவினர் வருகிறார்களா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவ்வாறு குழுவினர்கள் வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.