பெங்களூரு,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கலால்துறை போலீசார் கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கோட்டயத்தை சேர்ந்த ஜார்ஜ் குட்டி (வயது 33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ எடை உள்ள ஹசிஷ் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஜார்ஜ் குட்டி பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்ததும், பாகலூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் ஜார்ஜ் குட்டியை 9 நாட்கள் காவலில் எடுத்து கலால்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் பெங்களூரு பாகலூர் பகுதியில் அவர் தங்கி இருந்து போதைப்பொருள் விற்று வந்ததால், அதுதொடர்பாக விசாரிக்க கேரளாவில் இருந்து ஜார்ஜ் குட்டியை கலால்துறை போலீசார் பெங்களூருவுக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்திருந்தனர். மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே கோடே சர்க்கிளில் வரும்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் ஜார்ஜ் குட்டி கூறினார். இதையடுத்து, அவரது கை விலங்கை கழற்றிவிட்டதுடன், அவருடன் 2 போலீஸ்காரர் களும் உடன் சென்றனர்.
இந்த நிலையில், திடீரென்று 2 போலீஸ்காரர்களையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு ஜார்ஜ் குட்டி தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் ஜார்ஜ் குட்டி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காட்டன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ் குட்டியை வலைவீசி தேடிவருகின்றனர்.