மண்டியா,
கர்நாடகத்தில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி சட்டசபை தொகுதிகளுக்கும், சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இந்த 5 தொகுதிகளுக்கான தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. அதன்படி ராமநகர் சட்டசபை தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், ஜமகண்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சித்து நியாம கவுடா மகன் ஆனந்த் நியாம கவுடா வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு அதிகம் என தகவல்கள் கூறுகின்றன.
அதுபோல் சிவமொக்கா, பல்லாரி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் காங்கிரசுக்கும், மண்டியா நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்படுகிறது. இதில் பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாகேந்திரா எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. சிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
மேலும் பா.ஜனதா 5 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களமிறக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மற்ற 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.