மாவட்ட செய்திகள்

சேலத்தில் 4 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு கணவர் கைது

சேலத்தில் 4 குழந்தைகளின் தாய் தீக்குளித்தார். இதைத்தொடர்ந்து அவரை கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி மணிமேகலை (வயது27). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 பெண், ஒரு ஆண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளன. கோபால், மனைவி மணிமேகலை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து உள்ளார்.

இதே போன்று நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிமேகலை உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி உயிருக்கு போராடி அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கைது

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை பிடித்து விசாரித்தனர். பின்னர் மனைவியை கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.

தீக்குளித்துக்கொண்ட மணிமேகலைக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் நடந்தது. அவரை பிரிந்து கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT