பெரியகுளம்:
பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அதில் பெரியகுளம்-தேனி சாலை பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்த சாலையில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நேற்று ஊர்ந்து சென்றது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெரியகுளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புதருக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 12 அடி நீளம் இருந்தது. பின்னர் அதனை சோத்துப்பாறை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மலைப்பாம்பை சோத்துப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.