தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். இவரது மனைவி கிருஷ்ணம்மா (வயது 52). இவர் நேற்று முன்தினம் மாலை தனது தோட்டத்திற்கு சென்று மாட்டிற்கு புல் அறுத்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி தனது வாழை தோட்டத்திற்குள் யானைகள் வராமல் இருப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். இதை கவனிக்காத கிருஷ்ணம்மா மின்வேலியை மிதித்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார்.
இது குறித்து அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.