கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த முத்துரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). சிலிண்டர்களில் சமையல் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார் நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
மேலும் 2 வீடுகளில்
அதே பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(22). கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மடிக்கணினி திருடப்பட்டிருந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் கதவை சாத்தி விட்டு வீட்டு வாசலில் படுத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.
இந்த 3 சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.