வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கொருக்கதாங்கள் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுசீலா (வயது 65). நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை, அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கொருக்கதாங்களில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வயதான பெண் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மூழ்கி இருந்த அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
அவர் மாயமான சுசீலா என்பது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.