கோத்தகிரி,
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் மோகனா. இவர் நேற்று காலை 11 மணியளவில் நீலகிரி மாவட்ட வருவாய் ஆய்வாளருடன், நெடுகுளா கிராமத்துக்கு ஆய்வு பணிக்கு சென்றார். வருவாய் அலுவலரின் வாகனத்துக்கு பின்னால், தாசில்தாரின் ஜீப் சென்று கொண்டு இருந்தது. ஜீப்பை டிரைவர் அர்ஜூணன் ஓட்டினார். எஸ்.கைகாட்டிக்கும், டேன்டீ தொழிற்சாலைக்கும் இடையே உள்ள வளைவில் ஜீப்பை திருப்ப டிரைவர் முயன்றார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.
எனினும் தடுப்புகளின் சில பகுதிகள் ஜீப்பை தடுத்ததால், அந்தரத்தில் தொங்கியது. இதனால் சுமார் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் தாசில்தார் மோகனா, டிரைவர் அர்ஜூணன் ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் ஜீப்பில் இருந்த 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு, அந்தரத்தில் தொங்கிய ஜீப் மீட்கப்பட்டது.