பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல் நெடுங்கல் காலனி மக்கள் சுடுகாட்டுக்கு செல்வதற்கு சரியான பாதை இல்லை. இதனால் அவர்கள் பிணத்தை விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக சென்று பிணங்களை எரித்து வந்தனர். இதற்கு நில உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது உறவினர்கள் சுடுகாட்டில் எரிப்பதற்காக பிணத்தை மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது பிணத்தை தங்கள் விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பிணத்தை பாடையுடன் பொதட்டூர்பேட்டை - திருத்தணி சாலையில் வைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்ற னர். சாலை மறியல் செய்தவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 3 நாட்களுக்குள் சுடுகாட்டு பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பிணத்தை எரிப்பதற்காக கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.