மாவட்ட செய்திகள்

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை

ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள தொழுதூர் தச்சூர் சாலையை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 49). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 16 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

மாணிக்கம் குடும்பத்தினர் கதவை திறந்து வைத்துவிட்டு, வெளியே தூங்குவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT