சுரண்டை,
சுரண்டை அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. விவசாயி. அவருடைய மனைவி காளியம்மாள் (வயது 50). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை அவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க சங்கிலி, கம்மல் உள்பட மொத்தம் 10 பவுன் நகைகளையும், ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காளியம்மாள், சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உத்திரகுமார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். விவசாயி வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.