யாதகிரி,
யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா எம்.கோலூர் கிராமத்தில் நேற்று ஒரு சரக்கு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இச்சம்பவம் குறித்து உடனடியாக சகாப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டோவில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி 5 பெண்கள் இறந்தது தெரியவந்தது. 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விபத்தில் பலியான 5 பெண்களின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பலியானவர்கள் வடகேரா தாலுகா முனமுடகி கிராமத்தை சேர்ந்த அய்யம்மா(வயது 60), சரணம்மா(40), காசிம்பீ(40), பீமாபாய்(40), தேவேந்திரம்மா(70) என்பது தெரியவந்தது.
படுகாயம் அடைந்த 6 பேரின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இவர்கள் 11 பேரும் கூலி வேலைக்காக முனமுடகியில் இருந்து ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்காவுக்கு சென்றதும், அப்போது சரக்கு ஆட்டோ விபத்தில் சிக்கியதும் தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து சகாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.