நாக்பூர்,
நாக்பூர் மாவட்டம் கும்தாலா கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்ராவ் (வயது51). இவர் அங்குள்ள பண்ணை வீட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வசந்த்ராவ் பண்ணை வீட்டில் நடந்த போர்வெல் பணியில் மேற்பார்வையாளராக இருந்தார்.
இந்த நிலையில் பண்ணை வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து பணியை பார்வையிட்ட போது வசந்த்ராவ் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று வசந்த்ராவ் தொடர்பாக விசாரித்தார். இதில் வீட்டில் இருந்த அவரது மனைவி கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு அவர் வரவில்லை என தெரிவித்தார்.
இதனால் காணாமல் போன வசந்த்ராவ் குறித்து கமலேஷ்வேர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன வசந்த்ராவ் அங்குள்ள கழிமுக கால்வாயில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராய்சிங் மிவாடா (45) என்பவர் தான் வசந்த்ராவை கொலை செய்து கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.