பூந்தமல்லி,
செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). இவர் அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜா என்பவரது மகன் ஆவார். இவர் தனது நண்பர் தியாகராய நகரை சேர்ந்த துரைராஜ் (21), என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு போரூரில் உள்ள நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொகுசு காரில் சென்றனர்.
நள்ளிரவில் போரூரில் இருந்து ஆற்காடு சாலை வழியாக தியாகராயநகர் நோக்கி திரும்பி வந்தபோது, விருகம்பாக்கம் 80 அடி சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், விருகம்பாக்கம், ஆற்காடு சாலை அருகே சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் கார் முழுவதும் சேதமடைந்த நிலையில், வாலிபர்கள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.