திருக்காட்டுப்பள்ளி,
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே காவிரிக்கரையோரம் உள்ள கூகூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவரும், 16 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 6-ந் தேதி தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தனர். அங்கு காதலர்கள் இருவரும் எலி மருந்தை(விஷம்) தின்றனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தனித்தனியே பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் திருச்சி காவிரி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த தினேசின் காதலி திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கரூர் மாவட்டம் திருப்பாலத்துறை அருகே மயங்கி கிடந்த தினேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் தின்றதும், இதில் காதலன் பலியானதும் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.