விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்செல்கின்றனரா? என்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடையை தவிர மற்ற கடைகள் ஏதேனும் திறந்துள்ளதா? எனவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 கடைகளை மூடிய போலீசார்
இந்நிலையில் விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் ஆகியோர் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று ரோந்து சென்றபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செல்போன் கடை, எலக்ட்ரானிக், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், வாகன பழுதுபார்க்கும் கடைகளில் ஷட்டர் கதவை பாதியளவு திறந்து வைத்தபடி வியாபாரம் நடந்தது. அந்த கடைகளின் முன்பு பொதுமக்களும் சிலர் கூடி நின்றனர். இதையறிந்த போலீசார், ஊரடங்கை மீறியதற்காக 10 கடைகளின் கதவை இழுத்து மூடி பூட்டு போட்டு சாவியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.