மாவட்ட செய்திகள்

நாகையில் தீயில் எரிந்து குடிசை வீடு நாசம் போலீசார் விசாரணை

நாகையில் தீயில் எரிந்து குடிசை வீடு நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் பகுருதீன் என்பவர் குடியிருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு பகுருதீன் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது திடீரென அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைப்பதற்காக வாளியில் தண்ணீரை எடுத்து ஊற்றினர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.

விசாரணை

இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து வெளிப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT