திருவாரூர்,
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்பின் போது பொதுமக்களை பாதுகாப்பதில் போலீஸ்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்காக பேரிடர் பயிற்சி பெற்ற போலீஸ் மீட்பு குழுவினர், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள போலீஸ்துறை தயாராக உள்ளது.
தகவல் தெரிவித்தால் நடவடிக்கை
இதேபோல் பொதுமக்களின் அவசர உதவி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பாதுகாப்பு பணிக்காக மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆகியவை மாட்டம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனவே பொதுமக்கள் பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.