புதுக்கோட்டை,
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலக கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணிகளுள் ஒன்றாக இந்திய அணியும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு நகைக்கடை அதிபர் சந்தாஷினி வீரமணி தீவிர கிரிக்கெட் ரசிகர். இந்த உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என்று கூறிவரும் இவர் வித்தியாசமாக எதையாவது செய்ய முடிவு செய்தார். இதற்காக 500 மில்லி கிராம் தங்கத்தில் மாதிரி உலக கோப்பையை வடிவமைத்தார். மேலும், 250 கிராம் வெள்ளியில் 9 செ.மீ. உயரத்தில் வெள்ளியிலும் மாதிரி உலககோப்பையை உருவாக்கி அசத்தி உள்ளார்.
ஆர்வம்
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம். இந்த உலக கோப்பையை இந்தியா வெல்லும். இதற்காக 500 மி.கிராம் தங்கம் மற்றும் 250 கிராம் வெள்ளியில் மாதிரி உலக கோப்பைகளை வடிவமைத்து எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளேன். தங்கத்தில் செய்யப்பட்ட மாதிரி உலக கோப்பையின் மதிப்பு ரூ.1,500 ஆகும். வெள்ளியில் செய்யப்பட்டது, ரூ.15 ஆயிரம் மதிப்பு கொண்டதாகும் என்றார்.