புதுச்சேரி,
புதுவையில் நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுவையில் உள்ள தொழிற்சாலைகளில் சில தொழிற்சாலைகள் அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர். அந்த தொழிற்சாலைகள் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்கு தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் அதிக அளவு நிலத்தடி நீரை எடுப்பதால் நீர்மட்டம் கீழே செல்கிறது. கடல் நீர் உள்ளே புகுந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.