படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வட்டம்பாக்கம் ஊராட்சியில் உள்ள காஞ்சிவாக்கம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2008-ம் ஆண்டில் இருந்து நூலகம் இயங்கி வந்தது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயனடைந்து வந்தனர். தற்போது இந்த நூலகம் பூட்டி கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேலும் நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் செடிகள் முளைத்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள நூலகம் மிக அவசியமானதாகும். எனவே பூட்டி கிடக்கும் நூலகத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிவாக்கம் கிராம மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.