பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாசில்தார்களை இடமாற்றம் செய்து கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டு உள்ளார்.
தாசில்தார்கள் இடமாற்றம்
பொள்ளாச்சி தாசில்தாராக தணிகைவேலுவும், ஆனைமலை தாசில்தாராக வெங்கடாச்சலமும், கிணத்துக்கடவு தாசில்தாராக ஸ்ரீதேவியும் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட வருவாய் துறையில் கடந்த 4-ந்தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. அதன்படி தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் துணை தாசில்தார்கள், தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.
அதன்படி பொள்ளாச்சி தாசில்தார் தணிகவேல், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், ஆனைமலை தாசில்தார் வெங்கடாச்சலம், பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலராகவும், கிணத்துக்கடவு தாசில்தார் ஸ்ரீதேவி, கோவை உதவி பங்கீட்டு அலுவலர் சரகம் 1-க்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சூலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அரசகுமார் பொள்ளாச்சி தாசில்தாராகவும், பொள்ளாச்சி குடிமைப்பொருள் தனி தாசில்தார் விஜயகுமார், ஆனைமலை தாசில்தாராகவும், பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் சசிரேகா, கிணத்துக்கடவு தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பதவி உயர்வு
மேலும் பதவி உயர்வு அடிப்படையில் ஆனைமலை தாலுகா தனி துணை தாசில்தார் முருகேசன் பொள்ளாச்சி தனி தாசில்தாராகவும், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் ஜோதிபாசு, தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கும், நியமித்து கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டு உள்ளார்.