மதுரை,
சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் அரசு ஊழியர்களை போல் சம்பளம் வழங்க வேண்டும்,, சாலை ஆய்வாளர் பதவி மறுக்கக் கூடிய வகையில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு துணியால் முக்காடு அணிந்து இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்வது போன்று ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அழகர்கோவில் ரோட்டில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் சோலையப்பன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராஜா, சிவகங்கை மாவட்ட தலைவர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட செயலாளர் மனோகரன் வரவேற்றார். மாநில பொருளாளர் தமிழ், தொடக்க உரை நிகழ்த்தினார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் சிவகங்கை மாவட்ட செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார். இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.