பாபநாசம்,
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கருகாவூர் மெயின்ரோட்டில் நேற்று இரவு 8.30 மணியளவில் பறக்கும் படை அதிகாரி ஜானகிராமன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன், தலைமை ஏட்டு சம்பத்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஏ.டி.எம். பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.28 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாபநாசம் தாசில்தார் கண்ணனிடம் ஒப்படைத்தனர். அப்போது அவருடன் துணைதாசில்தார்கள் தர்மராஜ், செல்வராஜ், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.